Published Date: July 29, 2024
CATEGORY: CONSTITUENCY

மதுரை : கடந்த 11 மாதங்களாக விஷ்வா என்கிற மாணவனை தொடர்ந்து கண்காணித்து வந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தற்போது அவரை சர்பிரைஸ் செய்துள்ளார். அதாவது, கடந்த ஆண்டு ஆகஸ்டு 25ம் தேதி அன்று முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கிவைப்பற்காக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மதுரை முத்துப்பட்டி கள்ளர் உயர்நிலைப்பள்ளிக்கு சென்றிருந்தார்.
அப்போது பேசிக்கொண்டிருக்கும்போதே 7ஆம் வகுப்பு மாணவன் விஷ்வா, “மயக்கம் வருகிறது” என்று கண்ணை மூடினார். அதை கவனித்த அமைச்சர், அந்த மாணவனுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
மேலும் மாணவன் வீட்டுக்கு குழந்தை நல மருத்துவர் மற்றும் டயட்டிசியன்களை அனுப்பி வைத்து பரிசோதனை செய்ய வலியுறுத்தினார். ரத்தப் பரிசோதனை, ஸ்கேன் செய்து பார்த்தபோது அவருக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.
ஒரு நாள் விஷ்வாவை தனது இல்லத்துக்கு அழைத்து உரையாடினார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அப்போது விஷ்வா, விளையாட்டாக சைக்கிள் வேண்டுமென கேட்டுள்ளார். உடனே அமைச்சர், “உனது உடல் எடை வெறும் 23 கிலோ மட்டுமே உள்ளது. சைக்கிள் ஓட்ட பலம் வேண்டாமா? 30 கிலோவாக எடையை உயர்த்திக் கொண்டு வா. உனக்கு சைக்கிள் வாங்கித் தருகிறேன்” எனக் கூறி அனுப்பிவைத்துள்ளார்.
அன்று முதல் கடந்த 11 மாதங்களாக மாணவனுக்கு பழங்கள், மருந்துகள், ஊட்டச்சத்து பானங்களை வழங்கி பராமரித்து வந்துள்ளார். மேலும் வாரம்தோறும் விஷ்வா தனது எடையை புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்ப வேண்டும் எனவும் கூறியுள்ளார். அதனை பாலோ செய்து வந்த மாணவன் விஷ்வா தற்பொழுது 30 கிலோ எடையை எட்டியதால், அவருக்கு சைக்கிள் வாங்கிக் கொடுத்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சர்பிரைஸ் செய்துள்ளார்.
Media: Dinasuvadu.com